தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) அளிக்கப்படவுள்ளது.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர்/பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி/எம்.எஸ்.சி நர்சிங் பட்டப் படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங் மற்றும் பொது செவிலியர் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியில் பங்கு பெற 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்காக கால அளவு இரண்டு மாதமும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.