ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, தாட்கோ மூலம் தொழில்நுட்ப பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
தொழில் நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சியில் சேர பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, தொழில் கல்வி, பட்டய படிப்பு மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். பயிற்சி முடித்தவுடன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம், வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பமுள்ள நபர்கள் https://www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.