ஆதிதிராவிடர், பழங்குடியினரில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி.,யில் தொழில் பாதை திட்ட பயிற்சி அளிக்கப்படும் என கலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:சென்னை ஐ.ஐ.டி., பி.எஸ்சி., (தரவு அறிவியல், மின்னணு அமைப்பு) துவக்கியுள்ளது.
இதில் பிளஸ் 2 அதற்கு இணையான படிப்பு முடித்தவர்கள் சேர்ந்து 4 ஆண்டு பட்டம் படிக்கலாம். இதற்கான விண்ணப்பம் www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஐ.ஐ.டி., மூலம் நடத்தப்படும் நுழைவு தேர்வில் (ஜெ.இ.இ.,) பங்கேற்க தேவையில்லை.
அதற்கு பதில் சென்னை ஐ.ஐ.டி.,யில் தாட்கோ மூலம் 4 வார பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் நடக்கும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த வகுப்புகள் அனைத்தும் இணையதளம் வழியே நடக்கும். தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 12,500 பேர் இத்திட்டத்தில் சேர்ந்து படிக்கின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் 11 மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்பு இத்துறையில் ஏற்படும்.
இவ்வகுப்பில் சேர ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவர்கள் பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பில் 60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு கணிதம், ஆங்கிலத்தில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
பி.எஸ்சி., டேட்டா சயின்ஸ் அப்ளிகேஷன் தேர்வு கட்டணம் ரூ.1,500, பி.எஸ்சி., எலக்ட்ரானிக் சிஸ்டம் தேர்வு கட்டணம் ரூ.3,000.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருக்கும் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் கல்வி உதவி தொகை வழங்கப்படும்.
சென்னை ஐ.ஐ.டி., வழங்கும் 4 வார பயிற்சியில் கலந்து கொண்டு அதில் தேர்ச்சி பெற்றால், சென்னை ஐ.ஐ.டி.,யில் பி.எஸ்சி., சயின்ஸ் அன்ட் அப்ளிகேஷன், எலக்ட்ரானிக் சிஸ்டம் பட்டப்படிப்பிற்கான சேர்க்கை கிடைக்கும். இப்படிப்பிற்கான செலவுகள் தாட்கோ மூலம் வழங்கப்படும், என்றார்.