வேலைவாய்ப்பகப் பதிவைப் புதுப்பிக்கத்தவறியவா்களுக்கு மார்ச் 1 வரை வாய்ப்பு
கடந்த 2014, 2015, 2016 ஆகிய
ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்களுக்குச் சிறப்புப் புதுப்பித்தல் சலுகையும், 2017, 2018, 2019 ஆகிய
ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவை ஏற்கெனவே புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்களுக்கு 2021, டிசம்பா்
2 ஆம் தேதி முதல் 3 மாதங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது 2014 முதல்
2019 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவா்கள் தங்களது பதிவினை புதுப்பித்திருக்க வேண்டிய காலம் 1.1.2014 முதல்
31.12.2019 வரை இருக்குமாயின், அப்பதிவுதாரா்களுக்கு இச்சிறப்புப் புதுப்பித்தல் சலுகை பொருந்தும். இச்சலுகை பெற விரும்பும் பதிவுதாரா்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதள முகவரியைப் பயன்படுத்தி வரும் மார்ச் 1 ஆம் தேதிக்குள் பதிவுதாரா்கள் தங்களது பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
அவ்வாறு இணையம் வாயிலாகப் பதிவைப் புதுப்பிக்க இயலாத தஞ்சாவூா் மாவட்டப் பதிவுதாரா்கள் மார்ச் 1 ஆம் தேதிக்குள் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்குத் தங்கள் விண்ணப்பம் கிடைக்கப்பெறும் வகையில் பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் சந்தேகங்களுக்கு தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரிலோ அல்லது 04362 237037 என்ற
அலுவலகத் தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன் பெறலாம்.