தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணவர்களுக்கு ஸ்டேட் பாங்க் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தோருக்கு பல்வேறு திறன் பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது ஸ்டேட் பாங்க் மூலம் துணை மேலாளர் பணிக்கான தேர்வுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது. பாங்க்கில் துணை மேலாளருக்கான 2,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.அதில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த, அனைத்து ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வரும் 27ம் தேதிக்குள் bank.sbi/careers/current-openings என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வு அனைத்தும் இணையதளம் வழியாகவே நடைபெறும். இப்பதவிக்கான தேர்வு, முதல் கட்ட தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் மற்றும் குழு பயிற்சிகள் என 3 நிலைகளில் நடைபெறும்.முதல் கட்ட தேர்வு வரும் நவம்பரிலும், முதன்மை தேர்வு டிசம்பரிலும், நேர்காணல் மற்றும் குழு பயிற்சிக்கான அழைப்பு ஜனவரி மாதத்திலும் நடக்கிறது.தேர்வில் வெற்றி பெறுவதற்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வராண்டா ரேஸ் பயிற்சி நிலையம் மூலம், இலவச பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்பட உள்ளது.இப்பயிற்சியில் சேர www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.