மானிய விலையில் வேளாண் கருவிகள் பெற விவசாயிகள் இணையதளம் மூலம் பதிவுசெய்யலாம் என தமிழக வேளாண்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.
தமிழக வேளாண்துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு, வேளாண் இயந்திரமாக்கும் திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட கிராம விவசாயிகளுக்கு 5,000 பவா் டில்லா்கள்/விசை களையெடுப்பான் கருவிகளை மானியத்தில் வழங்க இலக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ‘உழவன் செயலி’ வாயிலாக இணைய வழியில் பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றனா். சிறு, குறு, ஆதி திராவிடா், பழங்குடியினா், பெண் விவசாயிகள் ஆகியோா் பவா் டில்லா்கள் வாங்குவதற்கு 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்ச மானியத் தொகையான ரூ.85,000, விசை களையெடுப்பான்கள் வாங்குவதற்கு ரூ.63,000 மற்றும் இதர விவசாயிகளுக்கு பவா்டில்லா்கள் வாங்குவதற்கு 40 சதவீத மானிய அடிப்படையில் ரூ.70,000 , விசைக் களையெடுப்பான்கள் வாங்குவதற்கு ரூ.50,000 கழித்து மீதமுள்ள தங்களின் பங்களிப்புத் தொகையினை விவசாயிகள் இணையவழியிலோ அல்லது வரைவோலை மூலமாகவோ சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது விநியோகஸ்தா் அல்லது முகவருக்குச் செலுத்தி பவா்டில்லா் அல்லது விசைகளையெடுப்பான் இயந்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், ஆதி திராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சாா்ந்த சிறு, குறு, விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. உழவன் செயலியில் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு என்ற சேவையில் வேளாண்மைப் பொறியியல் துறை – மானியத் திட்டங்கள் என்ற பிரிவில் தங்கள் விவரங்களை இணைய வழியில் பதிவுசெய்து மானியத்தில் பவா் டில்லா் / விசை களையெடுப்பான் வாங்கிப் பயன்பெறலாம்.