ஈரோட்டில் அக்டோபர் 7ம் தேதி நடைபெறவுள்ள அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியில் பங்கேற்க இளைஞா்களுக்கு ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா அழைப்பு விடுத்துள்ளார்.
அன்றாட வாழ்வில் உடற்தகுதியினை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவால் 2023-2024ம் ஆண்டிற்கான மாரத்தான் ஒட்டப் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி வரும் அக்டோபர் 7ம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் வ.உ.சி பூங்கா விளையாட்டு அரங்கத்திலிருந்து சூளை/ கனிராவுத்தர் குளம் / தண்ணீர் பந்தல் பாளையம் (டி-மார்ட்) வரை நடத்தப்படவுள்ளது.
நெடுந்துார ஓட்டப்போட்டி 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ தூரமும், 17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 5 கி.மீ தூரமும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தூரமும், 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் நடத்தப்படும். இப்போட்டியில் 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாணவரல்லாதோர் மற்றும் பொதுமக்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். 17 வயது உள்ளவர்கள் அதாவது ( 01.01.2006 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள்) 25 வயதிற்கு உட்பட்டவர்கள் (01.01.1998 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள்), 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் (01.01.1998-க்கு முன் பிறந்தவர்கள்) கலந்து கொள்ளலாம்.
இப்போட்டியில் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேற்படி போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரமும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10 ஆம் இடம் வரை பெறுபவர்களுக்கு தலா ரூ. 1 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே, மேற்படி பயன்களை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த 17 வயது முதல் உள்ள பள்ளி மாணவர்கள், மாணவியர்கள், மாணவரல்லாதோர் மற்றும் பொதுமக்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, போட்டிகள் முன்பதிவிற்கும் ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலத்திலும், 9788736392, 7708832432 என்ற எண்ணிற்கு SMS Space Anna Marathan Name /Age /Male or Female/Mobile Number என டைப் செய்து குறுஞ்செய்தி மூலமாகவும் அல்லது நேரில் அணுகியும் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.