கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு “எழுத்தாளர்-கலைஞர்” குழுவின் சார்பில் கவிதை போட்டி நடத்தப்பட உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்து குறிப்பு:
கலைஞர் நூற்றாண்டு விழா, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பை தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன.
அதில், “எழுத்தாளர்-கலைஞர்” குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்த கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களை போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் “எழுத்தாளர்-கலைஞர்” குழுவின் சார்பில் கவிதை போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.50,000, 2வது பரிசு ரூ.30,000, 3வது பரிசு ரூ.20,000, சிறப்பு ஊக்கப்பரிசு 10 பேருக்கு தலா ரூ.2,500 மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.
போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், கலைஞர் பண்முகத்தன்மையினை விளக்கும் வகையில், தமிழுக்கு மறு பெயர் கலைஞர், திராவிட சிந்தனைகளின் முரசொலி, எட்டாத கல்வியை எல்லோர்க்கும் வழங்கிய எட்டாவது வள்ளல், சொல்லை செயலாக்க பல துறைகள் கண்டவர், வருங்கால வரலாற்றை அச்சுக்கோர்த்தவர் போன்ற தலைப்புகளின் கீழ் 26 வரிகளுக்கு மிகாமல் தங்களது வரும் 22ம் தேதிக்குள் ezhuthalarkalaignar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அதில், தங்களது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை தவறாது குறிப்பிட வேண்டும்.