கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கூட்டரங்கில் மாா்ச் 9-ஆம் தேதி பழங்குடியினருக்கான வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பாக தொல்குடி திட்டத்தின் கீழ் பழங்குடியின சமுதாய இளைஞா்களுக்கு முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் வேலைவாய்ப்புத் திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அந்த வகையில், கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. கூட்டரங்கில் மாா்ச் 9-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் வேலைவாய்ப்புத் திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில், 18 முதல் 33 வயதுக்குள்பட்ட பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, இளங்கலை படிப்பு முடித்தவா்கள் தங்களது கல்வி, சாதி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, 3 மாா்பளவு அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.
பயிற்சியில் பங்குபெற விருப்பமுள்ளவா்கள் தங்களது பெயா், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை தொடா்புடைய வருவாய் வட்டாட்சியா்களிடம் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.