சென்னையில் கடந்த 4 நாட்களாக நடந்து வந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு நேற்றுடன் முடிந்தது.
ரிசல்ட்டை 4 மாதத்தில் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி சார்பில் துணை கலெக்டர் 18 இடம், துணை காவல் கண்காணிப்பாளர் 26, 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 25 வணிகவரி உதவி ஆணையர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்பட 95 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி நடந்தது. 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதிய தேர்வில் வெறும் 2 ஆயிரத்து 162 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இதில் பங்கேற்ற 2,113 பேருக்கான மெயின் தேர்வு சென்ைனயில் 22 பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் தாள் தேர்வு(கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு) நடந்தது. வெள்ளிக்கிழமை 2ம் தாள் தேர்வும், சனிக்கிழமை 3ம் தாள் தேர்வும், நேற்று 4ம் தாள் தேர்வும் நடந்தது. தேர்வு நடந்த மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளும் திடீர் ஆய்வு பணியிலும் ஈடுபட்டனர். 4 நாட்கள் நடைபெற்ற தேர்வும் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக குரூப் 1 மெயின் தேர்வு நடைபெற்றால் 4 மாதங்களில் ரிசல்ட் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி குரூப் 1 மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை டிசம்பர் மாதம் வெளியிட டிஎன்பிஎஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


