அஞ்சல் துறை தேர்வுக்கு தமிழக தேர்வர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக இணையவழி விண்ணப்பத்தில் மாற்றம் செய்யப்பட்டு மென அஞ்சல் பொது நிர்வாக துணை இயக்குநர் உறுதி அளித்திருப்பதாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஞ்சல் துறையில் கிராமின்டாக் சேவக் காலிப்பணியிடங்களுக்கு ஜனவரி 27 முதல் இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் 3167, பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். இந்தத் தேர்வுக்கு ஆறு பாடங்களுக்கு மதிப்பெண்கள் கேட்கப்பட்டுள்ளன.
ஆனால், தமிழகத்தில் மாநில பாட முறையில், தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களே உள்ளன. ஆனால் இணையவழி விண்ணப்பத்தில் ஆறாவதாக தெரிவு மொழி என்ற பாடமும் இடம் பெற்றுள்ளது. இதில் ஆறாவது பாடமே இல்லாத இரு மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழகத்தில் இங்குள்ள தேர்வர்கள் அதை நிரப்பா விட்டால் விண்ணப்பம் பூர்த்தியடைவதில்லை.
இதுதொடர்பாக அஞ்சல் துறைச் செயலர் வினீத் பாண்டே, தமிழ்நாடு தலைமை பொது மேலாளர் பி. செல்வக்குமார் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருந்தேன். இந்த நிலையில் அஞ்சல் பொது நிர்வாக துணை இயக்குநர் ராசி சர்மா கைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும், ஆறாவதாக உள்ள ‘தெரிவு மொழி’ பகுதி தமிழகத் தேர்வர்களுக்கு தடையாக இல்லாத வகையில் மாற்றப்படும் என்றும். மேலும், தேதி 3 நாட்கள் நீட்டிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. எனவே தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் இதை பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.