தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் “ஸ்டார்ட் அப் தமிழா” விரைவில் நேர்காணல்
தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் ‘ஸ்டார்ட் அப் தமிழா‘ நிகழ்ச்சிக்கு அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் நேர்காணல் நடத்தப்படும் என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் தெரிவித்தார்.
தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும், தொழில்முனைவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ‘ஸ்டார்ட் அப் தமிழா’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும், அதற்குப் பதிவு செய்வதற்கு www.startupthamizha.tv எனும் இணையதளத்தையும் அமைச்சர் தா. மோ. அன்பரசன் சென்னை ஐஐடி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் முகமை நிறுவனமான ‘ஸ்டார்ட் அப்டிஎன்’ மூலம் மேற்கொள்ளப்பட்ட ‘ஸ்டார்ட் அப் தமிழா’ திட்டத்தில் பல்வேறு முதலீட்டாளர்கள் ரூ. 200 கோடி முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் சிறந்த 50 தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்படும் முதலீட்டாளர்களின் வழிகாட்டுதலைப் பெறுவர்.
இது குறித்து அமைச்சர் தா. மோ. அன்பரசன் பேசியது:
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி, புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கி, அதிக வேலைவாய்ப்பை வழங்குவதில் ‘எம்எஸ்எம்இ’ துறை முனைப்புடன் செயல்படுகிறது. இதற்கு அடித்தளமாக விளங்குவது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.
தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தகுந்த சூழலை அமைத்து, தொழில் துறையில் தமிழ்நாட்டை மேம்படுத்தும் வகையில், ‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு’ எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2021 மார்ச் வரை சுமார் 2300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 7,400க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இளைஞர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் நேர்காணல்கள் நடத்தப்பட உள்ளன என்றார் அவர்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow