ரூ.20 லட்சத்துக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்ய
பான் எண் அல்லது
ஆதார் கட்டாயம்
வங்கி
கணக்கில் ஓராண்டில் மொத்தம்
20 லட்சம் ரூபாய் அல்லது
அதற்கு மேல் டெபாசிட்
செய்தாலோ, பணம் எடுத்தாலோ
பான் எண் அல்லது
ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக வங்கிக்கணக்கு திறக்க, பங்கு பரிவர்த்தனைகள், குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக
டெபாசிட் செய்யும் போது,
ரொக்கப் பரிவர்த்தனைகள், வீடு
பதிவு செய்வது, விற்பனை
செய்வது ஆகியவற்றின் போது
பான் எண் கட்டாயம்
தேவை. மேலும் வருமான
வரிச் சட்டத்தின் பிரிவு
139AA கீழ், ஜூலை 1, 2017 அன்று
PAN ஒதுக்கப்பட்ட அனைத்து
நபர்களும், ஆதார் எண்ணைப்
பெறத் தகுதியுடையவர்களும் அல்லது
ஆதார் எண்ணைப் பெற்றவர்களும், தங்களின் பான் மற்றும்
ஆதார் எண்ணை இணைக்க
வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசிதழில் மத்திய நேரடி
வரிகள் வாரியம் முக்கிய
அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, ஒரு
நிதியாண்டில் ரூ.
20 லட்சம் அல்லது அதற்கு
மேல் டெபாசிட் செய்ய
அல்லது வாபஸ் பெறவும்,
வங்கியில் நடப்புக் கணக்கைத்
தொடங்கவும் நிரந்தர கணக்கு
எண் (பான்) அல்லது
பயோமெட்ரிக் ஆதாரை காட்டுவது
கட்டாயம் என அறிவித்துள்ளது. வரி ஏய்ப்பைத் தடுக்கவும், வரி செலுத்துவோர் தளத்தை
விரிவுபடுத்தவும் இந்த
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மே10ம்
தேதி அன்று, மத்திய
நேரடி வரிகள் வாரியம்
வெளியிட்டுள்ள அறிவிப்பில் “வருமான வரி
முதன்மை இயக்குநர் ஜெனரல்
அல்லது வருமான வரி
இயக்குநர் ஜெனரல் நிரந்தர
கணக்கு எண் அல்லது
ஆதார் எண் அங்கீகாரத்திற்கான நடைமுறைகளுடன் வடிவங்கள்
மற்றும் தரநிலைகளை வகுக்க
வேண்டும்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமான
வரித்துறையுடன் தொடர்புடைய அனைத்து தகவல்தொடர்புகளிலும் மற்றும்
குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளும் போது
பான் கார்டு கையில்
இல்லாத பட்சத்தில் வாடிக்கையாளர்கள் பான் எண்ணையாவது கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
வங்கிகள்,
கூட்டுறவு வங்கிகள், தபால்
அலுவலகங்கள் ஆகிய அனைத்திலுமே 20 லட்சம் ரூபாய்க்கு மேல்
பணம் டெபாசிட் செய்யவும்
ஆதார் அல்லது பான்
கார்டு கட்டாயம் என
அரசு தெரிவித்துள்ளது. அதேபோல்
வங்கிகள், கூட்டுறவு வங்கிகள்,
தபால் அலுவலகங்களில் 20 லட்சம்
ரூபாய்க்கு மேல் பணம்
எடுப்பதற்கு ஆதார் அல்லது
பான் கார்டு கட்டாயமாகும். வங்கிகள், கூட்டுறவு வங்கிகள்,
தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் நடப்பு கணக்கு (Current Account) தொடங்கவோ,
ரொக்க கடன் கணக்கு
(Cash credit account) தொடங்கவோ பான் கார்டு
அல்லது ஆதார் கார்டு
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த
விதிகள் வரும் 26ம்
தேதி முதல் அமலுக்கு
வரும் என கூறப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 50 ஆயிரம்
ரூபாய்க்கு மேல் டெபாசிட்
செய்வதற்கு பான் எண்
கட்டாயம் என்கிற நடைமுறை
தற்போது அமலில் உள்ளது
குறிப்பிடத்தக்கது.