கரோனாவுக்கு எதிரான போரில், மேலும் ஒரு சாதனையாக, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை கோவின் வலைதளத்தில் சோ்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பாரத் பயோடெக் நிறுவனம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்தில் இன்கோவாக் என்ற மூக்கு வழியே செலுத்தும் தடுப்பு மருந்தும் இடம்பெறும். முதற்கட்டமாக இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டும் செலுத்தப்படவிருக்கிறது.
இன்று மாலை, கோவின் இணையதளத்தில், இந்த மருந்தும் இணைக்கப்படவிருக்கிறது. அதன்பிறகு, மக்கள், தங்கள் பகுதிக்கு அருகே இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்தை முன்னெச்சரிக்கை தவணையாகப் போட்டுக் கொள்ளலாம்.
18 வயதுக்குள்பட்டவர்களுக்கும், கரோனா தடுப்பூசி போடாதவர்களும், இதை மட்டுமே செலுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) இந்த மாதத் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்திருந்தது.
- தடுப்பூசிகளுக்கு நிகராக, இந்த தடுப்பு மருந்தும் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
- இன்கோவாக் மருந்து தயாரிப்பது, மற்ற தடுப்பூசி தயாரிப்பை விடவும் செலவு குறைவாகும்.
- இந்த மருந்தை சேமிப்பது, பல இடங்களுக்கும் கொண்டு செல்வது மற்றும் செலுத்துவது அனைத்தும் எளிதானது.
- அதிகபட்சமாக, இந்த மருந்து, ஒரு மனிதனின் எந்த உடல்பாகத்தில் கரோனா வைரஸ் நுழைகிறதோ, அந்த இடத்திலேயே தடுக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது.
- மூக்குள் உள்பக்கம் மற்றும் மூச்சுக்குழாயின் மேல் பகுதியில், இந்த வைரஸ் தொற்று தாக்காமல் தடுக்கும் வகையில் மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
- இதனை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கனவே கரோனா இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள், முன்னெச்சரிக்கை தவணையாக செலுத்திக் கொள்ளலாம்.
- சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகியிருக்கிறது. இந்தத் தடுப்பு மருந்தை அவசரகால அடிப்படையில் செலுத்த ஒப்புதல் கிடைத்துள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்கள், அதற்கான சான்றிதழை பெறுகின்றனா்.
அந்த வகையில், மூக்கு வழியாக தடுப்பு மருந்தை செலுத்துக் கொள்ளும் பயனாளிகள், அதற்கான சான்றிதழை பெற வேண்டி இருக்கும். எனவே அந்தத் தடுப்பு மருந்து குறித்த விவரத்தை கோவின் வலைதளத்தில் சோ்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பயோடெக் நிறுவனம் கோரிக்கை வைத்திருந்தது.
உலகில் முதன்முதலாக மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் உருவாக்கியது. அந்த மருந்தை 18 மற்றும் அந்த வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அவசரகால அடிப்படையில் செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


