தமிழகத்தில் பொறியியல்
பட்டதாரிகள் ஆசிரியர் பணியில்
சேர B.Ed படிக்க வேண்டுமா?
தமிழகத்தில் பொறியியல் முடித்தவர்கள் TET தேர்வு
எழுதலாம் என 2019ல்
அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த
அரசாணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல குரல்கள் அப்போதே
எழுந்தன. இது கலை
மற்றும் அறிவியல் மாணவர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் என ஒரு சாரரும்,
பொறியியல் மாணவர்கள் வேலை
பெறுவதற்கு ஏற்ற வகையில்
அவர்களின் கல்வித் தரத்தை
உயர்த்தாமல், வேலைவாய்ப்பு என்ற
பெயரில் இப்படியான அரசாணைகள்
சரியானது அல்ல என்று
ஒரு சாரரும் வாதிட்டனர். இந்த நிலையில் நம்
வாசகர் ஒருவருக்கு பொறியியல்
பட்டதாரிகளுக்கான ஆசிரியர்
பணி குறித்த ஒரு
சந்தேகம் எழுந்திருக்கிறது.
தமிழக
பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய
வேண்டும் என்றால் ஆசிரியர்
தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு
எழுதுவதற்கு B.Ed முடித்திருக்க வேண்டும்
என்பதும் கட்டாயம். பொறியியல்
மாணவர்களும் ஆசிரியர் பணியில்
சேர்வதை அனுமதிக்கும் விதமாக
2015ம் ஆண்டு முதலே
B.Ed கல்லூரிகளில் 20 சதவிகிதம்
பொறியியல் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. பொறியியல் நான்கு வருடம்,
அதன்பிறகு B.Ed இரண்டு வருடம்
ஆக ஆறு வருடங்கள்
ஆகும். 20 சதவிகிதம் இடங்கள்
பொறியியல் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், மிகவும் குறைவான
அளவே மாணவர் சேர்க்கை
இருந்தது. எனவே, இந்த
20 சதவிகிதம், 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.
இதன்
பின்னர்தான் 2019ம் ஆண்டு
பொறியியல் படித்தவர்கள், B.Ed-ம்
முடித்திருந்தால் ஆசிரியர்
தகுதித் தேர்வு எழுதி
6 முதல் 8ம் வகுப்பு
வரை கணித ஆசிரியர்
ஆகலாம் என்கிற அரசாணையைக் கொண்டு வந்தது தமிழக
அரசு. பொறியியலில் எந்தப்
பிரிவை எடுத்துப் படித்திருந்தாலும், B.Ed முடித்திருந்தால் ஆசிரியர்
தகுதித் தேர்வை எழுதலாம்.
பொறியியல் படித்தவர்கள் B.Ed முடிக்காமல் நேரடியாக ஆசிரியர் தகுதித்
தேர்வு எழுதி ஆசிரியர்
பணியில் சேர முடியாது.