பகுதிநேர ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விரும்புவோர் இம்மாத இறுதிக்குள், எமிஸ் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட பாடங்களுக்கு, பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த, 2012ல் நியமிக்கப்பட்டனர்.
பணியில் சேர்ந்தது முதல், கலந்தாய்வு நடத்தாததால், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல், பலரும் அவதிப்பட்டனர். இதோடு, பணிநிரந்தரம் செய்யுமாறு, பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை ஏற்கும் விதமாக, இடமாறுதல் கலந்தாய்வு நடத்த, முடிவு செய்யப்பட்டது.முதற்கட்ட கலந்தாய்வு, கடந்த 4ம் தேதி நடந்தது. இதில், காலியிடம் கணக்கிடுவதில் ஏற்பட்ட குளறுபடியால், முறையாக கலந்தாய்வு நடத்தபடவில்லை.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு, மார்ச் 15ம் தேதி முதல் நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இம்மாத இறுதிக்குள் விருப்பமுள்ளவர்கள், எமிஸ் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பகுதிநேர ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,’ அரசுப்பள்ளிகளில் நடுநிலை வகுப்புகளில், 100 மாணவர்கள் இருந்தால், ஒரு தொழிற்கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டும். இதன்படி, புதிதாக பணியிடங்கள் உருவாக்கி கலந்தாய்வில், காலியிடம் காட்ட வேண்டும். முன்கூட்டியே விண்ணப்பங்கள் பெறுவதால், எவ்வித குளறுபடிகளுக்கும் இடமளிக்காத வகையில், கலந்தாய்வு நடைமுறைகள் பின்பற்ற வேண்டும்,’ என்றனர்.