சென்னை கலெக்டர் விஜயராணி வெளியிட்ட அறிக்கை: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் இந்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-22 கல்வியாண்டில் பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு (இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைனர்) ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகையும், 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் / ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இந்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியான மாணவர்கள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு நவம்பர் 15ம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு நவம்பர் 30ம் வரையிலும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையதளத்தில் சரிபார்க்க இயலும். புதியதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய UDISE/AISHE/NCVT குறியீட்டு எண்ணை மாணவ/மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் https://www.minorityaffairs.gov.in/en/schemesperformance என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எண்.32, சிங்கார வேலர் மாளிகை, இரண்டாவது தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.