TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
தமிழ்நாட்டை தமிழகம் என குறிப்பிட்டது ஏன்? – ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்
தமிழ்நாட்டை, தமிழகம் என்று குறிப்பிட்டதற்கான விளக்கத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்வில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என தெரிவித்தார்.
இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அவர் கூறிய கருத்தை கண்டிக்கும் விதமாக, #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.
இந்நிலையில், தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று குறிப்பிட்டதற்கான விளக்கத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்துள்ளார். அவரது விளக்கத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
அதில், ‘2023 ஜனவரி 4ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும் ஒரு மாத காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி‘ நடைபெற்றது.
அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்‘ என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்.அந்த காலத்தில் ‘தமிழ்நாடு‘ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்‘ என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.
எனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின் பெயரை பொருள் மாற்றுவதற்கான பரிந்துரை போல கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை‘ எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்‘ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துள்ளார்.