தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த விருப்பம் உள்ளவர்கள் வெடிபொருட்கள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிக பட்டாசு உரிமம் பெற்றிட ஒற்றைச்சாளர முறையில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த உரிமம் பெறுவதற்கு தங்களது விண்ணப்பத்தினை வருகிற 22-ந் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பத்துடன் தற்காலிகப் பட்டாசு விற்பனை உரிமம் கோரும் கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வரையிலான வரைபடங்கள், பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம், அசல் நிரந்தரக் கணக்கு எண் (பான் கார்டு), ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு மற்றும் உரிய அரசு கணக்கு தலைப்பின் கீழ் உரிமக்கட்டணம் ரூ.500 செலுத்தியதற்கான அசல் செலுத்துசீட்டு ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
22-ந் தேதி கடைசி நாள், அதேபோல் தற்காலிக உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் விண்ணப்பதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது நகல், ஆகியவற்றையும், உரிமம் கோரும் இடம் வாடகைக் கட்டிடம் எனில், ஒப்பந்தப் பத்திரம், வரி செலுத்திய ரசீது மற்றும் கட்டிட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் அனுமதி கடிதம் ஆகியவற்றையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளை தவறாது கடைபிடித்து இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். வருகிற 22-ந் தேதிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும், நிபந்தனைகளை கடைபிடிக்காத விண்ணப்பங்களும் நிர்வாகக் காரணங்களினால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


