கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்க அக்., 31ம் தேதி கடைசி நாளாகும்.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும், நவ., 12 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர், வெடிபொருள் சட்ட விதிகளை பின்பற்றி இணையதளத்தின் வாயிலாக எந்தவொரு இ – சேவை, மக்கள் கணினி மையம் மூலம் உரிய ஆவணங்களுடன் வரும், 31க்குள் டி.ஆர்.,ஓ.,விடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இதில், சம்மந்தப்பட்ட பஞ்., வரி ரசீது, உரிமம் கோரும் இடத்தின் வரைபடம் (2 நகல்கள்). நடப்பு நிதி ஆண்டின் கட்டட வரி ரசீது, வாடகை கட்டிடமாக இருப்பின் நோட்டரி வழக்கறிஞர் கையொப்பத்துடன் கூடிய ஓராண்டிற்கு குறையாத காலத்திற்கு செய்துகொள்ளப்பட்ட வாடகை ஒப்பந்த பத்திரம், இவற்றுடன் உரிம கட்டணம், 500 ரூபாய் செலுத்தி, அதற்கான அசல் சலான் இணைக்கப்பட வேண்டும். 2 ஸ்டாம் சைஸ் புகைப்படம், ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்கள் இருக்க வேண்டும்.
உரிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப் பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். தவறும் உரிமைதாரரின் உரிமத்தை ரத்து செய்வதுடன், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.