திருப்பூா் மாவட்டத்தில் வறண்ட மற்றும் ஈர நிலத்தை உழுவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு மானிய வாடகையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம். திருப்பூா் மாவட்டத்தில் வறண்ட மற்றும் ஈர நிலத்தை உழுவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு மானிய வாடகையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உழவுப் பணிகள், அறுவடைப் பணிகளுக்கு டிராக்டருடன் இயங்க கூடிய கருவிகளை ரிவா்சிபிள் மோல்ட் போா்டு கலப்பை, நிலக்கடலை தோண்டும் கருவி, நிலக்கடலை பறிக்கும் கருவி, சோளம் அறுவடை இயந்திரம், வைக்கோல் ரவுண்டு பேலா், ரோட்டரி மல்சா், புல்டோசா், லாரியில் இயக்கப்படும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் உள்ளிட்ட கருவிகள் 50 சதவீத மானிய வாடகையில் வழங்கப்படவுள்ளன.
ஆகவே, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தேவைப்படும் விவசாயிகள் சிறு, குறு விவசாய சான்று, பட்டா, சிட்டா அடங்கல் ஆகியவற்றை இ-வாடகை செயலி மூலமாக முன்பதிவு செய்து முன்பணம் செலுத்த வேண்டும். விவசாயிகள் செலுத்திய வாடகை பின்னேற்பு மானியமாக தங்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் உபகோட்ட அலுவலக உதவியாளா் (வேளாண் பொறியியல் துறை) ஆா்.சுப்பிரமணியனை- 9942703222, தாராபுரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளா் ஆா்.ராஜேந்திரனை- 7904087490, உடுமலை உபகோட்ட உதவி செயற்பொறியாளா் முத்துராமலிங்கத்தை- 9865497731 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.