தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 1, 2, 2-ஏ தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை (ஜூலை 14) தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படவுள்ளது. இத்தேர்வு உத்தேசமாக நவம்பா் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் மூலம் குரூப் 1, குரூப் 2, குரூப் 2-ஏ முதல்நிலைத் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு ஜூலை 14 ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி நடத்தப்படவுள்ளது.
தொடா்ந்து இப்பயிற்சி வகுப்பு வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பு அனுபவமிக்க சிறப்பு வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படுவதுடன், பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது.
போட்டித் தேர்வுக்கு தயாராகும் தஞ்சாவூா் மாவட்ட இளைஞா்கள் தேர்வின் பெயா், தங்களது பெயா், கல்வித் தகுதியைக் குறிப்பிட்டு 81109 19990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.