மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்களின் கீழ் உதவித் தொகைகளைப் பெற இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
இதற்கான அறிவிப்பை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
அதன் விவரம்: மாற்றுத் திறனாளிகளின் நலத் துறையின் கீழ், கல்வி உதவித் தொகை, உதவி உபகரணங்கள், வங்கிக் கடன் மானியம், திருமண உதவித் தொகை, மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன.
இவற்றைப் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக நடத்தப்படும் இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதள முகவரி மூலமாகவோ அல்லது அருகாமையில் உள்ள இணைய சேவை மையங்களுக்குச் சென்றோ விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.