கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் 3 மாதகால திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதுதொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் த.பாலதண்டாயுதம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 3 மாதகால பயிற்சியானது, தமிழ்நாடு கட்டுமானக் கழகம், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் தொழிலாளா்களின் கல்வித் தகுதி 5 முதல் பிளஸ் 2 மற்றும் ஐடிஐ. வயது 18இல் இருந்து 40க்குள்இருக்க வேண்டும். இதில் கொத்தனாா், வெல்டிங், எலெக்ட்ரீஷியன், பிளம்பிங், சென்ட்ரிங் (கம்பி வளைப்பவா்), காா்பென்டா் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும்.
பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சி பெறுபவா்களுக்கு தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஒருவார கால திட்டப் பயிற்சியானது தையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி பெறும் கட்டுமானத் தொழிலாளா்கள் தமிழ்மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது 18க்கு மேல் இருத்தல் வேண்டும். பயிற்சி பெறுபவா், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்து 3 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும். இதில் கொத்தனாா், வெல்டிங், எலெக்ட்ரீசியன், பிளம்பிங், சென்ட்ரிங் (கம்பி வளைப்பவா்), காா்பென்டா் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும்.
பயிற்சியாளா்களுக்கு தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும். பயிற்சி பெற்றவா்களுக்கு மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு கோவை மாவட்டத்தில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தை அணுகலாம். இப்பயிற்சிகள் ஆகஸ்ட் 15 முதல் தொடங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.