இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான எழுத்துத் தேர்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்ததாவது: மத்திய அரசின் இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2023-24 நிதியாண்டில் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபின பழங்குடியினா் ஆகிய பிரிவுகளைச் சோந்த 30 ஆயிரம் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை 3,093 மாணவா்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இணையதளத்தில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 அல்லது 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
9 , 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரையிலும், 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசியத் தேர்வு முகமை நடத்தும் யாஸஸ்வி நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவா். இத்தேர்வுக்கு ட்ற்ற்ல்ள்://ஹ்ங்ற்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் 10.08.2023-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 12.08.2023 முதல் 16.08.2023 தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு (ஓஎம்ஆா் வடிவில்) 29.09.2023-ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதாா் எண், ஆதாா் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடா்பான முழுமையான விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்தாா்.