சென்னை: வாரிசு இல்லாதவர் இறந்தால், யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது குறித்து, அரசு உத்தரவில் திருத்தம் மேற்கொள்ள, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சந்தானம், 2022 பிப்ரவரியில் இறந்தார்.
அதற்கு ஒரு மாதம் முன், அவரது மனைவி இறந்தார்; இவர்களுக்கு வாரிசு கிடையாது. இதையடுத்து, சந்தானத்தின் சகோதரர் ராஜேந்திரன் மற்றும் இரண்டு சகோதரிகள், வாரிசு சான்றிதழ் கேட்டு, பெரம்பூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்தனர்.வாரிசு சான்றிதழ் வழங்காததால், உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். மனு, நீதிபதி சேஷசாயி முன், விசாரணைக்கு வந்தது. தாசில்தார் தரப்பில், கூடுதல் பிளீடர் பிந்த்ரன் ஆஜராகி, ”வருவாய் துறை 2022 செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவில், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
அதில், இரண்டாம் நிலை வாரிசுதாரர்களை கருத்தில் கொள்ளவில்லை.”திருமணமானவர் என்றால், பெற்றோர் மற்றும் இறந்தவரின் மகன், வாரிசு சான்றிதழ் பெறலாம். திருமணமாகாதவர் என்றால், இறந்தவரின் பெற்றோர், அவரது சகோதரர், சகோதரிகள் வாரிசு சான்றிதழ் பெறலாம்,” என்றார்.மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வீரராகவன், ”அரசாணையில் குறைபாடு உள்ளது. திருமணமான ஆண், வாரிசுகள் இல்லாமல் இறந்து, அவரது பெற்றோரும் இறந்திருந்தால், ஹிந்து வாரிசுரிமை சட்டப்படி, இரண்டாம் நிலை வாரிசுதாரர்களான அவரது சகோதரர், சகோதரிகள், வாரிசுரிமை சான்றிதழ் பெற முடியும்,” என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசின் உத்தரவை பரிசீலிக்கும்போது, ஹிந்து வாரிசுரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ள இரண்டாம் நிலை வாரிசுதாரர்களை கணக்கில் கொண்டதாக தெரியவில்லை.
எனவே, 2022 செப்டம்பரில் பிறப்பித்த அரசாணையில் உரிய திருத்தங்களை, அரசு மேற்கொள்ள வேண்டும்.இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரரின் விண்ணப்பத்தை, எட்டு வாரங்களில் பைசல் செய்ய, தாசில்தாருக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.