ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தாட்கோ மூலம் இலவசமாக, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்த ஆதிதிராவிடர் மற்றும பழங்குடியின மாணவர்களுக்கு, இலவசமாக ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி படிப்புடன் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படுகிறது.
மத்திய அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் செயல்படும் சென்னை தரமணி இன்ஸ்டியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்ரிங் டெக்னாலஜியில் சேர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.படிப்பு முடிந்ததும் நட்சத்திர விடுதிகள், விமான நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும்.
பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் 45 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.திட்டத்தில் பதிவு செய்ய விரும்புவோர் தாட்கோ இணையதளத்தில் www.tahdco.com விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.