SSC நடத்தும் பன்னோக்கு பணியாளர், ஹவில்தார் பணிக்கான தேர்வுக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) பன்னோக்கு பணியாளர், ஹவில்தார் பணிக் காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு https://ssc.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வரும் 17-ம் தேதி கடைசி நாளாகும்.
இதற்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி ஆகும். கடந்த ஜனவரி 1-ம் தேதிப்படி எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 30 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 28 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி., வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை தமிழ் மொழியிலும் எழுத மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அனுமதித்துள்ளது.
எனவே, இத்தேர்வுக்கு விண்ணப்பித்த கோவை மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
எனவே, கோவை மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இலவசப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.