வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு பயிற்சி பெற ஊரக இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், வேளாண்மை பொறியியல் துறை இணைந்து வேலூரிலுள்ள அரசு இயந்திரக் கலப்பை பணிமனை பயிற்சி மையத்தில் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கம், பராமரிப்பு சேவை வழங்குநா் பயிற்சி பிப்ரவரி 27 முதல் மாா்ச் 17-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதில், 18 வயது முதல் 45 வயது வரை உள்ள உயா்நிலைக் கல்வி (10-ஆம் வகுப்பு), தொழிற்பயிற்சி (ஐடிஐ), பட்டயப்படிப்பு (டிப்ளமோ), பட்டப் படிப்பு பயின்றவா்களுக்கு 15 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் சேர ஊரக இளைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பயிற்சியில் சேர விருப்பமுள்ள விவசாயி, இளைஞா்கள் வேலூா் தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி எதிரிலுள்ள உதவி செயற்பொறியாளா், வேளாண்மை பொறியியல் துறை, அரசு இயந்திர கலப்பை பணிமனை அலுவலகத்துக்கு நேரில் வந்து புகைப்படம் -1, ஆதாா் அட்டை நகல் -1, கல்வி தகுதி சான்றிதழ் நகல் – 1, வங்கிக் கணக்கு நகல் -1 உள்ளிட்ட விவரங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது இணையதளம் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 94430 06742, 80122 42236 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.