சென்னையை போலவே மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படவுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணியை மெட்ரோ நிர்வாகம் தொடங்கியுள்ளது.
சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் மக்களின் போக்குவரத்தை எளிமைப்படுத்தும் விதத்தில் மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்கவும்:
கர்நாடக வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு கண்டிக்கத்தக்கது- ஜி.கே.வாசன்
இந்த மெட்ரோ ரயில் சேவை தற்போது மதுரை நகரிலும் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் சேவை பிரிவுகளில் ஒன்றான MRTS என அழைக்கப்படும் பறக்கும் ரயில் திட்டத்தை மதுரையில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரையில் MRTS குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தபுள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் இறுதியில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு இருக்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரை 31 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயிலை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசிடம் ஏற்கனவே சமர்பிக்கப்பட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக வரும் பட்ஜெட்டில் ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.