கொரோனா தொற்று பாதிப்பின் 3ம் அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகளை குறித்து மத்திய ஆயுஷ் பாதுகாப்பு அமைச்சகம் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸின் பரவல் நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் பரவி வருவதால் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கடந்த 2020 ம் ஆண்டில் தொடங்கிய கொரோனாவின் முதல் அலை நாட்டில் பரவத் தொடங்கியது. இதனால் அதிக அளவிலான வயது முதிர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தியதன் மூலம் முதல் அலையின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தற்போது 2021ம் ஆண்டில் கொரோனாவின் 2ம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் அலையின் பாதிப்பை விட 2ம் அலையில் வரலாறு காணாத அளவிலான எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவாகியுள்ளது. 2ம் அலையில் நடத்தர வயதினர் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து சிறிது இடைவெளியில் 3ம் அலையும் வருவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், 3ம் அலையில் குழந்தைகள் தான் பாதிக்கப்படும் சூழல் இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது, ஆயுஷ் அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிமை அன்று தொற்றுநோய்களின் போது குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இது தொடர்பான அறிக்கையில், தொற்று நோயினால் பெரியவர்களை விட, குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் சிறிய அளவிலேயே இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதிக அளவிலான சிகிச்சைகள் குழந்தைகளுக்கு பெரும்பாலும் தேவைப்படுவதில்லை.
வருமுன் காத்தல் நடவடிக்கைகள் தான் குழந்தைகளை பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். மாஸ்குகளின் பயன்பாடு, யோகா பயிற்சி செய்வது, ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் எடுத்துக் கொள்வது போன்ற வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். நோயின் அறிகுறிகளை கண்காணித்தல், பெற்றோருக்கு தடுப்பூசி போடுவது போன்றவையும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


