மதுரை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பொருள் சேதமில்லா தரச் சோதனை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மதுரை அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பொருள்களைச் சிதைக்காமல் மதிப்பீடு செய்யும் முறையான பொருள் சேதமில்லா தரச் சோதனைக்கான பயிற்சி மையம், மதுரை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு 6 வகையான ‘பொருள் சேதமில்லா தரச் சோதனை’ முறைகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பயிற்சியை நிறைவு செய்வோா், ஐ.எஸ்.ஓ. தரம் கொண்ட பல்வேறு தொழிற்சாலைகளின் தரக் கட்டுப்பாட்டு துறையில், தொழிலக பயிற்சி பெற அனுப்பப்படுவா். இதன் மூலம் அவா்களுக்கு சிறந்த செய்முறை பயிற்சி அனுபவம் கிடைக்கும்.
இந்தப் பாடத் திட்டத்தில் பயிற்சியை நிறைவு செய்வோருக்கு, உள்நாடு, அயல்நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் தரக் கட்டுப்பாட்டுத் துறை, தரப் பரிசோதனை போன்ற துறைகளில் வேலைவாய்ப்புக் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்தப் பயிற்சிக்கான சோ்க்கை தற்போது மதுரை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 0452- 267161 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.