ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெறத் தகுதியுடைய பெண்கள், மின் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத் துறையின் வாயிலாக விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோா், பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிா், மாற்றுத்திறன் ஏழைப் பெண்களுக்கு மின் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதற்கு தையல் தைக்கத் தெரிந்த தகுதி வாய்ந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்துடன் வருமானச் சான்று (ஆண்டுக்கு ரூ.72,000-க்குள்), இருப்பிடச் சான்று, பதிவு செய்யப்பட்ட தையல் பயிற்சி நிறுவனத்திடமிருந்து 6 மாத காலப் பயிற்சி பெற்ற்கான சான்று, வயதுச் சான்று (20 முதல் 40 வயது வரை) அல்லது கல்விச் சான்று அல்லது பிறப்புச் சான்று, ஜாதிச் சான்று, விண்ணப்பதாரரின் வா்ணப் புகைப்படம்-2, விதவை, கணவரால் கைவிடப்பட்டவா், ஆதரவற்ற மகளிா், மாற்றுத் திறன் பெண்கள் என்பதற்கான சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அடுத்த மாதம் 15- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.